Sunday, February 13, 2011

வைரமுத்து கவிதைகள்

எங்கே குழந்தையின்
கைகள் நீளுமோ
அங்கே ஒளிருக வெண்ணிலவே

எங்கே உனக்கு முன்
மனிதர் விழிப்பரோ
அங்கே தோன்றுக கதிரவனே


எங்கே விதவையர்
கூந்தல் காயுமோ
அங்கே மலருக பூவினமே

எங்கே பூவினம்
தூங்கி விழிக்குமோ
அங்கே சுற்றுக வண்டினமே


எங்கே புன்னகை
போலியில்லையோ
அங்கே சிரித்திடு பொன்னிதழே

எங்கே தன்னலம்
அழிந்து போகுமோ
அங்கே நீர்பொழி என்விழியே


எங்கே வேர்வைகள்
தீர்ந்து போகுமோ
அங்கே மழை கொடு மாமுகிலே

எங்கே ஏழையர்
அடுப்பு தூங்குமோ
அங்கே பற்றுக தீச்சுடரே


எங்கே கன்றுகள்
மிச்சம் வைக்குமோ
அங்கே சிந்துக கறவைகளே

எங்கே மனிதர்கள்
சைவமாவாரோ
அங்கே பாடுக பறவைகளே


எங்கே உழைப்பவர்
உயரம் உயருமோ
அங்கே சுழலுக ஆலைகளே

எங்கே விதைத்தவர்
வயிறு குளிருமோ
அங்கே விளைந்திடு நெல்மணியே


எங்கே கண்களில்
கள்ளமில்லையோ
அங்கே தோன்றுக கனவுகளே

எங்கே உறவுகள்
ஒழுக்கமாகுமோ
அங்கே வில்லெடு மன்மதனே


எங்கே பயணம்
மீளக்கூடுமோ
அங்கே நீளுக சாலைகளே

எங்கே மண்குடம்
காத்திருக்குமோ
அங்கே பரவுக ஆறுகளே


-கவிப்பேரரசு வைரமுத்து
புத்தகம்: வைரமுத்து கவிதைகள்

சினிமாவும் நானும்

சிலபேருக்கு மட்டும் அவர்களின் பெயருகேற்ற மாதிரி அவர்களின் குணச்சிறப்பும் சாதனையும் ஒன்று போல அமைந்து விடுகிறது. பிற்காலத் தமிழ் சினிமாவில் புதிய களம் கண்டு மாபெரும் வெற்றிவாகை சூடிய ராஜாதான் பாரதிராஜா..

16 வயதினிலே படம் வெளிவரும்வரை சினிமா ஸ்டுடியோக்களில் வரையப்பட்டிருந்த கிராமங்களைத் தான் நம்மால் பார்க்க முடிந்தது. 16 வயதினிலே வந்த பிறகே நிஜகிராமங்களையும், அந்த மக்களையும், அந்த மண்ணின் வாசனையையும் நம்மால் நேருக்குநேர் பார்க்க முடிந்தது. அந்தக் கிராமங்களில் வாழும் ஒருவராக நம்மை நினைத்துக் கொண்டு அவரது திரைப்படங்களைப் பார்த்து மகிழ முடிந்தது. தமிழ்ச் சினிமாவில் பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகு, தமிழ்த் திரைப்பட உலகமே கிராமங்களை நோக்கி ஓடத் தொடங்கியது. கிராமங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றது மட்டும் பாரதியின் சாதனை என்று நினைக்க முடியாமல், கதை சொல்லும் நேர்த்தியிலும் புதுமை படைத்தவர் பாரதி. புதுவிதமான திரைக்கதை, நடிகர் தேர்வு, பாடல் எடுக்கும் அழகிய பாங்கு, கதாப்பாத்திரங்களின் யதார்த்தமான பேச்சு, நடைமுறை வாழ்க்கை, அதன் அழகு மொத்தத்தில் தமிழ் சினிமாவை மண்வாசனையுடன் தலை நிமிர வைத்தது இயக்குநர் பாரதிராஜாதான்.

அவர் இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் கதாநாயகனை அதுவும் கமலஹாசனை சப்பாணியாக நடிக்க வைத்து, சினிமா ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதுவரை இருந்த சினிமா சம்பிரதாயத்தை உடைத்தெறிந்த முதல் இயக்குநரும் பாரதிதான்.

பாரதி, தனது முதல் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஒரு புதிய நதியை ஓட வைத்திட அந்த நதியில் தான் இன்றுவரை எத்தனை இயக்குநர்கள் படகோட்டி வருகிறார்கள்!

கதாநாயகன் என்றால் ஆணழகனாக இருக்க வேண்டும், கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவனாய் இருக்க வேண்டும் என்ற வறட்சியான தத்துவத்தையெல்லாம் போட்டு நொறுக்கிப் பொசுக்கியவர் இந்த பாரதி. அவர் இயக்கிய படங்களில் எல்லாம் அவரும் எதிர்பாராத புதுமுகங்களை படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் உச்சகட்டப் புகழைப் பெற்று பிரபலமானார்கள்.

இந்திய சினிமாவிலேயே தனது திரைப்படங்களின் மூலம் கணக்கற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று சாதனை படைத்த ஒரே இயக்குநர் பாரதிராஜாதான் என்று நினைக்கிறேன். பாரதிராஜாவின் ஒரு படத்தில் நடித்தாலே போதும் தனது எதிர்காலம் ஒளிமயமாகி விடும் என்று ஏங்கி நிற்கும் கூட்டம் இன்றும் காத்துக் கொண்டு நிற்கிறது.

அவரது இன்னொரு மாபெரும் சாதனை, அவருடைய உதவியாளர்கள் அனைவரும் இன்று பிரபலமான இயக்குநர்களாக இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக அவர்களுடைய உதவியாளர்களும் இன்று இயக்குநர்கள், நடிகர்களாகி விட்டார்கள். உதாரணத்திற்கு பாரதிராஜாவின் உதவியாளர்களான பாகியராஜ், மணிவண்ணன் இருவருமே புகழ்பெற்ற இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கிறார்கள். பாக்யராஜ் அவர்களிடம் உதவியாளர்களாய் இருந்த பார்த்திபன் போன்றவர்கள் நடிகர்கள், இயக்குநர்களாகி விட்டார்கள்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி நடிகர், நடிகை களானவர்களை தமிழ்நாடே அறியுமென்பதால் அந்த நீ..ள..மான பட்டியலை இங்கே நான் எழுதவில்லை.

பாரதிராஜா படமென்றாலே, புதுமைகளுக்கு பஞ்சம் இருக்காது.. மண்வாசனைக்குத் தட்டுப்பாடு இருக்காது.. மனக்களிப்பிற்குத் தடையிருக்காது என்று மக்கள் ஒரு கல்வெட்டையே உருவாக்கிவிட்டார்கள்.

முதல்மரியாதை படத்தை நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன், நடிகர் திலகத்தின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அதைக்கொண்டு பாரதி கதைப் போக்கு இன்றும் பிரமிக்க வைக்கிறது.

நான் கதை வசனகர்த்தாவாக இருந்தபோது, பாரதி உதவி இயக்குநராக இருந்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்கள். ஆனால் 16 வயதினிலே வரும்வரை அந்த நண்பனிடம் இப்படியொரு அமானுஷ்யத் திறமை இருந்ததை நான் அறியவில்லை. இன்றும் அனது அருமை நண்பனாகத் திகழும் பாரதிராஜா, கர்வம் இல்லாத வெற்றியாளன். திரைஉலகில் என்றுமே களைத்துச் சளைக்காத ஒரு அபூர்வப் போராளி இந்த பாரதிராஜா!

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய உண்மைக் கலைஞன். பாரதிராஜாவுக்குப் பின், தமிழ் சினிமாவில் இயக்குநராகும் ஆசையில் சென்னைக்கு ஓடிவந்தவர்கள் ஏராளம்.. இயக்குநர் ஆகும் ஆசையை இளைஞர்களிடத்தில் உண்டாக்கிய இயக்குநர் பாரதிராஜா!

பரதிராஜாவின் பாதிப்பால் பலரும் பல இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து இயக்குநர்கள் ஆனார்கள். அவர்களின் பெயரில் கட்டாயமாக பாரதி என்பதும் ராஜா என்பதும் இரண்டில் ஒன்று நிச்சயம் இடம் பெறும். அந்த அளவிற்குப் புதிய இயக்குநர்களை வசீகரித்தவர் பாரதிராஜா..

இன்றுவரை பாரதிராஜா என்ற அற்புதக்கலைஞன் மண்வாசனை கொண்ட படங்களைத் தருவதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

பாரதிராஜாவிற்கு தமிழ் சினிமாவும், தமிழர் கலாச்சாரமும், தமிழர்களின் பெருமையும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

-இயக்குநர் மகேந்திரன்

புத்தகம்: சினிமாவும் நானும்

தயாரிப்பு & வெளியீடு:
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்
சென்னை-24

Wednesday, January 26, 2011

காவலன் விமர்சனம்



நடிகர் : விஜய்
நடிகை : அசின்
இயக்குனர் :சித்திக்
 தினமலர் விமர்சனம்
சில, பல தோல்விகளுக்கு பின் விஜய் திட்டமிட்டு தந்திருக்கும் வெற்றி படம்தான் "காவலன்"!
அந்த ஏரியாவிலேயே ‌பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாதலத்தில் அடிதடி வம்பு, வழக்கு என தாதாவாக வாழ்ந்த அவர், ஒரு நம்பி‌க்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்கு வரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காபந்து செய்கிறார். அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்‌கே காவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார். அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல் காதலால் எழும் விளைவுகளும்தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை!
நம்பமுடியாத கதை என்றாலும் அதை நம்பும் படியாக செய்து அசினின் காவலனாக, காதலனாக கல்லூரி தோழனாக விஜய், வடிவேலு அண்ட் கோவினருடன் பண்ணும் காமெடி கலாட்டக்கள் விஜய்யும், இயக்குனர் சித்திக்கும் ஏற்கனவே இணைந்த "ப்ரண்ட்ஸ்" படத்தை ஞாபகபடுத்தும் அளவிற்கு கலகலப்பை ஏற்படுத்துவது காவலன் படத்தின் ப்ளஸ் பாயிண்ட். கண்ணதாசனா, காளிதாசனா? பாரதியாரா, பாரதிராஜாவா...? என அடிக்கடி வடிவேலு தானும் குழம்பி, விஜய்யையும் குழப்பும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.
விஜய் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பதுதான் காவலன் படத்தின் பெரியபலம்! அதிலும் தன் காதலி யார்? என்பதை தெரியாமல் நீங்கதான் என் காதலி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.... நான் அவகிட்டே எப்படி பேசுவேன்னு இப்போ பேசி காட்டுகிறேன்... என்று காதலியை சந்திக்க வந்த இடத்தில் உடன் வரும் அசினின் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு விஜய் பேசும் காதல் மொழியை விஜய் ஒருவரால் மட்டுமே செய்து காட்ட முடியும். 38வயதில் ஏதோ 25வயது வாலிபர் மாதிரி உடலாலும் மனதாலும் காதலிக்கும் விஜய்க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே தீர வேண்டும்! காதல் காட்சிகளில் மட்டுமல்ல ஆக்ஷன் காட்சிகளிலும் புதிய பரிமாணம் காட்டி இருக்கும் விஜய்யை இடையில் ஏற்பட்ட தோல்வி(படங்)கள் ரொம்பவே பண்படுத்தி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்! வாவ் என்ன ஒரு ரொமான்ஸ் என்ன ஒரு ஆக்ஷன், என்ன ஒரு காமெடி சென்ஸ்! கீப் இட் அப் விஜய்!
அசின், ராஜ்கிரணின் மகளாக விஜய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார் அம்மணி. அசினை காட்டிலும் அவர் உடன் வரும் மித்ரா குரியன் இரண்டாம் நாயகி என்பதை காட்டிலும் இன்னும் பிரமாதமாக நடித்து அசினையே சில இடங்களில் ஓவர் டேக் செய்துவிடுகிறார்.
ராஜ்கிரண் அப்பா கேரக்டரா? அப்பப்பா கேரக்டரா? என கேட்கும் அளவிற்கு மிரட்டலான நடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார். தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யின் அப்பா நிழல்கள் ரவி, அம்மா யுவஸ்ரீ என எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு! அம்மாவாசை வடிவேலுவும், அவரது ஜோடி பூங்கொடி நீபாவும் செம காம்பினேஷன்! எல்லாம் சரி விஜய், அசினுடன் கல்லூரியில் படிக்கும் குள்ளநடிகருக்கு "அஞ்சாநெஞ்சன்" என பெயர் வைத்து வம்பை விலைக்கு வாங்கியது யார் விஜய்யா? சித்திக்கா?
வித்யாசாகரின் இசையும் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து காவலனை விஜய்யின் காதலுக்கு மரியாதை அளவு உயர்த்தி பிடித்திருக்கின்றன!
மொத்தத்தில் "காவலன்" விஜய் ரசிகர்களுக்கு "காதலன்".


குமுதம் விமர்சனம்

காதைப் பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்... பான்பராக் துப்பும் வில்லன்கள்... ரத்தம் சொட்டுகிற மோதல்கள்... குத்துப்பாட்டு இவை எதுவுமே இல்லாத விஜய் படம்!

மலையாளத்தில் ஜெயித்த பாடிகார்டை காவலனாக்கி தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இரண்டு பெண்கள். சிறிது காலம் அவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய கட்டாயத்தில் ஒரு இளைஞன். ஒருத்தி அவனை வழக்கமான நட்புடன் அணுகுகிறாள். இன்னொருத்தி அவனைச் சீண்டிப் பார்க்க முடிவெடுக்கிறாள். விளையாட்டு வினையாக மாறி, மூவரையும் என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் காவலனின் பயோடேட்டா.

ஆக்ஷன் இமேஜையெல்லாம் க்ளாக் ரூமில் கடாசிவிட்டு, சிரித்த முகமும் வெகுளிப் பேச்சுமே போதும் என்று தடாலடியாக ரூட் மாறியிருக்கிற விஜய்யைப் பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பான பாடிகார்டாக பந்தா பண்ணுவதும், காதலில் க்ளீன் போல்ட் ஆகி அசடு வழிவதுமாக விஜய்யிடம் எதிர்பார்க்கவே முடியாத "பக்கத்து வீட்டுப்பையன் கலாட்டாக்கள்.

விஜய் முன்னால் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டே, அவரோடு மொபைல் போனில் விளையாடும் காட்சிகள் முழுவதும் அசின் கொடி பறக்கிற ஏரியா. க்ளோஸப் காட்சிகளில் முகத்தில் தெரிகிற கூடுதல் முதிர்ச்சி அசினை "சேச்சியாக்கியிருப்பதை யாராவது கவனித்திருக்கலாம்.

அசினுக்கும் விஜய்க்குமான கண்ணாமூச்சியில் கடைசியில் அறுவடை பண்ணிவிடுகிற தோழியாக வருகிற மித்ரா நல்ல தேர்வு. திரைக்கதை வடிவேலுவை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்தாலும், காமெடிக்குப் பஞ்சம் இல்லை. வடிவேலு தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசி எல்லோரையும் அலற வைக்கும் காட்சிகள் சிரிப்பு ரகளை.

செம்மனூர் ஜமீன்தார், ரொம்ப கோபக்காரர் என்று ராஜ்கிரணுக்கு கதையில் என்ன பில்டப் கொடுத்தாலும், மனசில் ஒட்டவில்லை. அசின் அம்மாவாக ரோஜாவை மெனக்கெட்டு அழைத்து, சும்மா வந்துபோக வைத்திருக்கிறார்கள். ராஜ்கிரணுக்கு வருகிற ஆபத்து அவரது மகள் அசினுக்கும் வரும் என்பது சரி. அதற்காக அசின் படிக்கும் கல்லூரியிலேயே பாடிகார்டு விஜயையும் படிக்க வைப்பது... எங்கேயாவது நடக்குமா? கவர்ச்சிப் பற்றாக்குறையை சமாளிக்க யாரையாவது உடலுக்குப் பொருந்தாத பாவாடை சட்டையில் வலம் வர வைப்பதை நம்மாட்கள் நிறுத்த மாட்டார்களா?

மெலடியில் சோடை போகாத வித்யாசாகர் இம்முறை தனக்கேற்ற கதை கிடைத்தும் ஏனோ தவறவிட்டிருக்கிறார்.

மலையாள சாயலோடும் லாஜிக் உரசல்களோடும் தேர் ஆடி அசைந்து வந்தாலும், பத்திரமாக நிலைக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் இயக்குநர் சித்திக்.

காவலன் : காதலனுக்கு மரியாதை! குமுதம் ரேட்டிங் : ஓ.கே.

Tuesday, January 25, 2011

சிறுத்தை விமர்சனம்


பருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை ‌‌வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல். (இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)!

திருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் ‌‌பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அப்புறம்? அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி!. குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட! ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா? போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா? குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார்? தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை!

சகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு ‌கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல. சந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட ‌வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா? என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்! தியேட்டரே சிரிப்பில் குளோஸ்!!

தமன்னா, கார்த்திக்கு ‌பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு!

ஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.! தமிழுக்கு?!

வித்யாசாகரின் வித்தியாச இசை, க.வேல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை!

-தினமலர் நாளிதழ்

குமுதம் விமர்சனம்

காமெடிக் காக்டெய்லில் காரசாரமான ஆந்திரா சைட்டிஷ்ஷோடு சீறிப்பாயும் ஒரு காக்கிச்சட்டையின் கதை.

கதை என்ன? திருட்டுப் பையன் கார்த்தி, ஒரு பெட்டியை அபேஸ் செய்யும்போது அதனுள் இருக்கும் ஒரு குழந்தை, "அப்பா என்று கார்த்தியை உரிமை கொண்டாடுகிறது. தவிர கார்த்தியைப் போட்டுத்தள்ள ஒரு கும்பலே வீச்சரிவாளுடன் சுத்துகிறது. யார் அந்த குழந்தை? கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது தெரிந்தவுடன் ராக்கெட்டாய் சீறுகிறது சிறுத்தை.

கார்த்திக்கு இது நான்காவது படம். இரட்டை வேடத்தில் முதல் படம். நல்லவன் மாதிரி சிரித்துக் கொண்டே ஆட்டையைப் போடுவதாகட்டும், குழந்தையை முதலில் வெறுத்துவிட்டுப் பின்னர் அதை ஏற்றுக் கொள்வதாகட்டும், தமன்னாவின் அழகில் சொக்கிப் போய் கிறுகிறுத்து அலைவதாகட்டும், எதிரிகளை சொல்லி அடித்து துவம்சம் செய்வதாகட்டும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுகிறார் கார்த்தி. சந்தானம் கூட்டணி வேறு. ரகளைக்கு சொல்லவா வேண்டும்?

அதுவும் கொலை செய்யப்பட்ட பாண்டியனாக மீண்டும் எதிரியின் கோட்டைக்குள் புகுந்து, வலது காலா, இடது காலா எதை முதலில் வைப்பது என்று பல்லாங்குழி ஆடி, "டடடபா என்று டேபிள் மேல் தாளம் தட்டி, பழைய ஞாபகத்தில் வில்லனின் செயினையும் அபேஸ் பண்ணி, ஸ்டைலாய் நடந்து பின்னிப் பெடலெடுக்கும் காட்சியில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.

"நான் சாகும்போது என் கண்ணுல பயம் இருக்கக் கூடாது, உதட்டுல புன்னகை இருக்கணும், கை மீசையை முறுக்கணும்!, "போலீஸ்காரனோட உடுப்புகூட டூட்டி பார்க்கும்டா! வசனம் சில இடங்களில் பளிச்.

ஜில்லென்று இருக்கிறார் தமன்னா. வழக்கம்போல் அப்பாவி இடுப்பைக் காட்டும்போது அடப்பாவி!

படத்தில் செமையாய் ஸ்கோர் செய்கிறார் சந்தானம். வசனத்தில் அவ்வப்போது ஆபாசம் வந்தால் உடனே சிரிக்கிறார்கள்!

ராக்கெட் பாட்டு ஓகே. மற்றவை பெப்பே. தெலுங்கு வாடையும், ஆந்திரக் கூச்சலும் ஓவர் டோஸாகி எரிச்சல் மூட்டுகிறது. யார் அந்த குட்டிக் குழந்தை? கொள்ளை அழகு. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்தச் சிறுமி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, "நான் அப்பா சொல்றேன், கையை விடு என்று கார்த்தி கத்தும் காட்சி நன்று.

சிறுத்தை : கொஞ்சம் உறுமல், கொஞ்சம் இருமல்! குமுதம் ரேட்டிங் : ஓ.கே.!